அனிமேஷன் வடிவில் ‘தபாங்’: தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

அனிமேஷன் வடிவில் ‘தபாங்’: தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘தபாங்’. இப்படத்தில் சல்மான் கான் நடித்த சுல்புல் பாண்டே கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான 'தபாங்' படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தை அனிமேஷன் சீரிஸாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இரண்டு சீசன்களாக உருவாகவுள்ள இதில் ஒவ்வொரு சீசனிலும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 52 எபிசோட்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ‘தபாங்’ தயாரிப்பாளர் அர்பாஸ் கான் கூறியிருப்பதாவது:

''கதை சொல்லலில் உள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி ‘தபாங்’ படத்தை தனித்தனி கதைகளாக உருவாக்கவுள்ளோம். சுல்புல் பாண்டேவின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பான ஒன்று, அனிமேஷனில் அவரது சாகசங்கள் இதற்கு முன் பார்த்திராத ஒன்றாக இருக்கும்.

பல லட்சம் இதயங்களை வென்ற காஸ்மோஸ் மாயா நிறுவனத்துடன் இணைந்து நாங்கள் இதை உருவாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்''.

இவ்வாறு அர்பாஸ் கான் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in