

என் பெற்றோர் உட்பட அனைவருமே நான் பணத்தை வீணடிக்கிறேன் என்று நினைத்தனர் என்று கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கணா ரணவத், மணிகார்ணிகா ஃபிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் செலவழித்திருக்கும் தொகை 48 கோடி ரூபாய்.
மூன்று மாடி கொண்ட இந்த மாளிகையைப் பற்றி சமீபத்தில் பேசியுள்ள கங்கணா, "நான் சொந்தமாக ஸ்டுடியோவைக் கட்ட நினைத்தேன். ஆனால் நடுவில் 'ரங்கூன்', 'சிம்ரன்' உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. அதனால் சற்று தள்ளிப் போட்டேன். 'மணிகார்ணிகா'வுக்குப் பிறகும் நிலை மீண்டும் மாறியது. எனக்குப் பிடித்த விதத்தில் நான் மொத்தமாக என் மாளிகையைக் கட்டமைத்துக் கொண்டேன்.
வேறெங்காவது வைத்து வேலைச் எய்யலாமே என அனைவரும் சொன்னார்கள், ஏன் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுக்க முடியாது என்று கேட்டார்கள். உயிர் இல்லாத அந்த கண்ணாடி கூண்டுக்குள் என்னால் இருக்க முடியாது என்று நான் சொன்னேன். எனக்கு உயிர்ப்புடன் இருக்கும் சுவர்கள், பசுமை என்னைச் சுற்றியிருக்க வேண்டும்.
எனது ஆடிட்டர், ஏன் இந்த சொத்தில் பணத்தைப் போடுகிறீர்கள். வழக்கமாக நீங்கள் எந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றுகிறீர்களோ அவர்களே உங்களுக்கான இடத்தை வாடகைக்கு எடுத்துத் தருவார்களே. இந்த பணத்தை வைத்து பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் அல்லது உணவகத்தை வாங்குங்கள்.
குறைந்தது 40-50 லட்சம் வருடத்துக்கு வாடகையே கிடைக்கும் என்றார். என் பெற்றோர் உட்பட அனைவருமே நான் பணத்தை வீணடிக்கிறேன் என்று நினைத்தனர். ஆனால் இப்போதும் இது எனக்கு ஒரு சவால் தான். இது நல்ல முதலீடா இல்லையா என்பதை நானே போகப் போகப் தெரிந்துகொள்வேன்" என்று கூறியுள்ளார்.