படப்பிடிப்புத் தளத்தில் அக்‌ஷய் குமார்: பின்னணி என்ன?

படப்பிடிப்புத் தளத்தில் அக்‌ஷய் குமார்: பின்னணி என்ன?
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் சற்று தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்க அனுமதியளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார், இயக்குநர் பால்கி ஆகியோர் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. ஊரடங்கு அமலில் இருக்கும்போது படப்பிடிப்பை நடத்தலாமா என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் பால்கி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

''ஊரடங்குக்குப் பிறகான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வுக்காக இந்திய அரசின் விளம்பரம் ஒன்றுக்காக நானும் அக்‌ஷய் குமாரும் படப்பிடிப்பு நடத்தினோம்.

இந்தக் கடினமான சூழலில், இந்த விளம்பரப் படம் மூலம் ஊரடங்குக்குப் பிறகு படப்பிடிப்புத் தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்.

எங்கள் தயாரிப்பாளர் அனில் நாயுடு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். நாங்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து இந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

சுகாதார நடவடிக்கைகளுடன், குறைவான பணியாளர்களுடன் இந்தப் படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து முடிந்தது''.

இவ்வாறு பால்கி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in