சைகை மொழியை இந்தியாவின் 23வது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும்: ரன்வீர் சிங் 

சைகை மொழியை இந்தியாவின் 23வது அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும்: ரன்வீர் சிங் 
Updated on
1 min read

இந்திய சைகை மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆக்சஸ் மந்த்ரா அறக்கட்டளை என்ற அமைப்பும், தேசிய காது கேளாதோர் சங்கமும் சேர்ந்து இதற்கான மனு ஒன்றை தயார் செய்து அதை அதிகாரப்பூர்வமாக அரசுக்கு அனுப்பவுள்ளது. இந்த கோரிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ரன்வீர் இந்த மனுவில் கையெழுத்திடவுள்ளார். இந்திய குடிமக்கள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஸ்பிட்ஃபயர் என்ற ராப் பாடகரின் வர்தாலப் என்ற சைகை மொழி பாடல் வீடியோவை தனது சொந்த இசை நிறுவனத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்.

"எங்களின் இந்த முயற்சி மூலம், இந்தியாவின் 23-வது அதிகாரப்பூர்வ மொழியாக சைகை மொழியை அறிவிக்க எங்களால் முடிந்த ஆதரவைத் தருகிறோம். என் சக இந்தியர்களும் இந்த முயற்சியில் இணைந்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வர்தாலப் என்கிற ஸ்பிட்ஃபயரின் ஒரு சைகை மொழி வீடியோவையும் வெளியிடுகிறோம். இது குறித்த நிறைய உரையாடல்களை இது ஆரம்பித்து வைக்கும் என்று நம்புகிறேன்" என்று ரன்வீர் பதிவிட்டுள்ளார்.

ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் '83' திரைப்பட வெளியீடு கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம், இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக் கோப்பை வெற்றிப் பயணத்தைப் பற்றியது. தமிழ் நடிகர் ஜீவா இந்தப் படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in