

டிக் டாக் செயலியில் உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட 50 பேரின் பட்டியலில் நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டருக்கு இணையாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது டிக் டாக் செயலி.
ஹாலிவுட் பிரபலங்களான தி ராக், செலினா கோம்ஸ், வில் ஸ்மித் ஆகியோரை டிக் டாக் செயலியில் 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். டிக் டாக் செயலியில் உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட முதல் 50 நபர்களின் பட்டியலில் இருக்கும் இவர்களோடு தற்போது பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார். தற்போது அவரை 17 கோடியே 30 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஷில்பா ஷெட்டி கூறியுள்ளதாவது:
''நாம் அனைவரும் இப்போது மிகவும் கடினமான, கணிக்கமுடியாத சூழலில் இருக்கிறோம். தினமும் செய்திகளைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த மோசமான சூழலுக்கு இடையே இந்த வீடியோக்களின் மூலம் என்னை மகிழ்வித்துக்கொள்ள முடிவு செய்தேன். இவற்றில் என் கணவரும் கூட அவ்வப்போது தோன்றியுள்ளார். என்னிடம் தற்போது இருக்கும் ஒரே நடிகர் அவர்தான்.
மக்கள் என் வீடியோக்களைப் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சூழலில் அவர்கள் மனம்விட்டு சிரிக்க ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. என் வீடியோக்கள் அவர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டிக் டாக்கில் முதல் 50 இடங்களுக்குள் வந்ததன் மூலம் இந்த சூழலில் மக்களை உற்சாகப்படுத்துவதில் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன்''.
இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கமிங்’ பாடலுக்கு ஷில்பா ஷெட்டி நடனமாடிய டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.