

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், பிரபல இந்தி பாடலாசிரியர் ப்ரஸூன் ஜோஷியும் சேர்ந்து, கோவிட்-19க்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு இந்திப் பாடலை உருவாக்கியுள்ளனர்.
நம்பிக்கை, நேர்மறை சிந்தனை, ஊக்கத்தை பரப்புவதற்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இதில் இணைந்திருக்கிறோம், இதிலிருந்து சேர்ந்தே மீள்வோம் என்று இந்தப் பாடலின் வரிகள் எழுதப்பட்டுள்ளன. ரஹ்மான் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளதோடு சில வரிகளைப் பாடியுள்ளார்.
"ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடல் எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது, அது இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்" என ரஹ்மான் கூறியுள்ளார். மோஹித் சவுஹான், ஸ்ருதி ஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பல்வேறு பாடகர்கள் இந்தப் பாடலில் பாடியுள்ளனர். ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி, சிதார் கலைஞர் ஆசாத் கான் உள்ளிட்ட பிரபல இசைக்கலைஞர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.
இந்தப் பாடல் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் முன்னெடுப்பாக உருவாகியுள்ளது. இந்தப் பாடல் மூலம் பிரதமரின் கோவிட் நிவாரண நிதிக்கு மக்களை நிதி கொடுக்குமாறு ஊக்கப்படுத்துகிறது. மேலும் இந்தப் பாடல் ஒவ்வொரு முறை சமூக வலைதளங்களில் பகிரப்படும்போது ரூ.500 பிரதமரின் நிவாரண நிதிக்குச் செல்லும். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் தான் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரூ.150 கோடியை நிதியாக அளித்தது.