உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மறுஒளிபரப்பு நிகழ்ச்சியானது ராமாயண் தொடர்: லாக்டவுனில் புதிய சாதனை

உலகில் அதிகம் பார்க்கப்பட்ட மறுஒளிபரப்பு நிகழ்ச்சியானது ராமாயண் தொடர்: லாக்டவுனில் புதிய சாதனை
Updated on
1 min read

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகி வரும் ராமானந்த் சாகரின் ராமாயண் தொடர், உலகில் அதிகம் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

தேசிய ஊரடங்கை முன்னிட்டு, பிரபலமான பழைய தொடர்கள் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு உருவான மறைந்த ராமானந்த் சாகர் தயாரித்து இயக்கிய தொடரான 'ராமாயணம் ' தொடர், மார்ச் 28 முதல், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், ஒரு நாளைக்கு இரண்டு பகுதிகள் என நான்கு பகுதிகள் ஒளிபரப்பாகின்றன.

மறு ஒளிபரப்பு தொடங்கப்பட்ட வாரத்திலிருந்து அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்து வந்தது ராமாயண். தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஏப்ரல் 16-ம் தேதி ஒளிபரப்பான ராமாயண் பகுதியை 7.7 கோடி மக்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் உலகில் அதிக மக்கள் பார்த்துள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையை எட்டியது. இதை தூர்தர்ஷன் தரப்பு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ராமானந்த் சாகர் இயக்கத்தில் ஜனவரி 1987-ல் ஒளிபரப்பாக ஆரம்பித்த 'ராமாயணம்' தொடர் மொத்தம் 78 பகுதிகள் என ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பானது. தொலைக்காட்சி பார்வையாளர்களில் கிட்டத்தட்ட 82 சதவீதம் பேர் இந்தத் தொடரைப் பார்த்துள்ளதாகவும், உலகில் அதிகம் பார்க்கப்பட்ட தொடர் என்றும் அப்போதே சாதனை படைத்தது.

உலகில் அதிகம் பார்க்கப்பட்ட இதிகாசத் தொடர் என்ற சாதனையை 2003-ம் ஆண்டு வரை தக்க வைத்தது. தற்போது மறு ஒளிபரப்பிலும் ராமாயண் தொடர் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in