

ஒரு அபூர்வ திறமை, அற்புதமான நடிகர் என்று இர்ஃபான் கான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது இர்ஃபான் கான் மறைவு குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"பிரபல நடிகர் இர்ஃபான் கானின் திடீர் மரணம் வருத்தமடையச் செய்கிறது. ஒரு அபூர்வ திறமை, அற்புதமான நடிகர். அவரது வெவ்வேறு கதாபாத்திரங்களும், அசாத்தியமான நடிப்பும் என்றும் நம் நினைவில் பதிந்திருக்கும். சினிமா உலகுக்கும், லட்சக்கணக்கான சினிமா பிரியர்களுக்கும் பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் என் அனுதாபங்கள்"
இவ்வாறு குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.