மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை தந்த அக்‌ஷய்குமார்

மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை தந்த அக்‌ஷய்குமார்
Updated on
1 min read

மும்பை காவல்துறையின் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி நன்கொடை கொடுத்ததற்காக, நடிகர் அக்‌ஷய் குமாருக்கு, மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இதில் அக்‌ஷய் குமார் அதிக அளவில் நிதியுதவி கொடுத்துள்ளார். முதலில் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார்.

பின்பு, மும்பை மாநகராட்சிக்கு 3 கோடி ரூபாய் வழங்கியிருந்தார். தற்போது மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்துப் பகிர்ந்துள்ள ஆணையர், "மும்பை காவல்துறை அறக்கட்டளைக்காக அக்‌ஷய் குமாரின் ரூ.2 கோடி நன்கொடைக்கு, காவல்துறை நன்றி தெரிவிக்கிறது.

நகரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள், மும்பை காவல்துறையைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்களின் உயிரைப் பாதுகாக்க, உங்கள் பங்கு பெருமளவும் உதவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அக்‌ஷய் குமார், "கரோனாவை எதிர்த்து உயிரிழந்த மும்பை காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள்கள் சந்திரகாந்த் பெண்ட்ரூகர் மற்றும் சந்தீப் சூர்வேவுக்கு என் வணக்கங்கள். நான் எனது கடமையைச் செய்திருக்கிறேன். நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் பாதுகாப்பாக, உயிரோடு இருப்பதற்கு அவர்கள்தான் காரணம் என்பதை மறக்க வேண்டாம்" என்று பகிர்ந்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in