‘மிகப்பெரிய அவமானம்’ - மொரதாபாத் சம்பவத்துக்கு ஜாவேத் அக்தர் கடும் கண்டனம்

‘மிகப்பெரிய அவமானம்’ - மொரதாபாத் சம்பவத்துக்கு ஜாவேத் அக்தர் கடும் கண்டனம்

Published on

மொரதாபாத் சம்பவத்துக்கு பிரபல கவிஞர் ஜாவேத் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதிக்குச் சென்ற மருத்துவப் பணியாளர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினரை வேறு இடத்தில் தனிமைப்படுத்துவதற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது அப்பகுதி மக்கள், டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். சுகாதாரப் பணியாளர்களுடன் சென்றிருந்த போலீஸாரையும் தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

மருத்துவர்கள் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு கவிஞர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற தங்கள் சொந்த உயிரைப் பணயம் வைப்பவர்களைத் தாக்குபவர்கள் எத்தகைய அறியாமையில் இருக்கிறார்கள் என்று என்னால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. மொரதாபாத்தில் நடந்தது ஒரு மிகப்பெரிய அவமானம். அந்த நகரத்தில் இருக்கும் படித்த மக்களிடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். எப்படியாவது அந்த அறியாமைக்காரர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்குக் கல்வி புகட்டுங்கள்''.

இவ்வாறு ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.

மொரதாபாத் சம்பவத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in