

எந்தப் பொருளையும் பதுக்காதீர்கள் என்று நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய ஊரடங்கு சூழலில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அயராது விநியோகிப்பவர்களுக்கு நன்றி கூறியுள்ள நடிகர் அமிதாப் பச்சன், எந்தப் பொருளையும் பதுக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள அமிதாப் பேசியுள்ளதாவது:
"ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் ஊரடங்கைப் பின்பற்றும்போது, சில சுயநலமற்ற கரோனா போராளிகள் அத்தியாவசியப் பொருள்களை நாம் தினமும் பெற உதவி செய்கின்றனர்.
அப்படிப்பட்ட தன்னலமற்ற சேவை செய்பவர்களால்தான் இந்த ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. அப்படி விநியோகிக்கும் போராளிகளுக்கு என் மனப்பூர்வமான நன்றி. உணவுப் பொருட்கள், மருந்துகள் என முக்கியப் பொருட்களின் விநியோகம் தடைப்படாமல் இருக்க ஓய்வின்றி உழைக்கும் மக்களுக்கும் சேர்த்து நன்றி சொல்கிறேன்.
நம் நாட்டுக் குடிமக்கள் அனைவரும் சற்று நிதானமாக இருக்க வேண்டும் என்று பணிவுடன் கோருகிறேன். அத்தியாவசியப் பொருட்களில் தட்டுப்பாடு இருக்காது. எனவே தயவுசெய்து பொருட்களைப் பதுக்காதீர்கள். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்" என்று அமிதாப் பேசியுள்ளார்.
கரோனா குறித்துத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் அமிதாப் பச்சன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். ஒரு சில பதிவுகளுக்கு அவர் எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் தொடர்ந்து தனது விழிப்புணர்வுப் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார் அமிதாப்.