கரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய யூ டியூப் பிரபலம்

கரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய யூ டியூப் பிரபலம்

Published on

இந்தியாவில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். இதனால் அடித்தட்டு மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த யூ டியூப் பிரபலமும், ஸ்டாண்ட்-அப் காமெடியனுமான புவன் பாம், மார்ச் மாதம் முழுவதும் தனது யூ டியூப் சேனல் மூலம் கிடைத்த வருமானத்தை கரோனா வைரஸ் பாதிப்புக்கு வழங்கியுள்ளார்.

26 வயதாகும் புவன், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.4 லட்சம், ஃபீடிங் இந்தியா என்ற அமைப்புக்கு ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளார்.

இது குறித்து புவன் கூறியிருப்பதாவது:

''பொதுவாக இது போன்ற விஷயங்களை நான் பேசுவது கிடையாது. ஆனால், நமது நாட்டுக்கு நமது உதவி இப்போது தேவை. அனைவருக்கும் உதவ நாம் இப்போது தயாராக வேண்டும். அதுதான் முக்கியம். பிரதமர் நிவாரண நிதி, முதலமைச்சர் நிவாரண நிதி, ஃபீடிங் இந்தியா ஆகியவற்றுக்கு எனது பங்களிப்பைச் செய்துள்ளேன். தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக உழைப்பவர்களுக்கு இப்படித்தான் என்னால் திருப்பிச் செய்ய முடியும்''.

இவ்வாறு புவன் கூறியுள்ளார்.

புவனின் ‘BB ki Vines' யூ டியூப் சேனலுக்கு 1.6 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in