ஒரு அறை வீட்டிலிருந்து மாளிகைக்கு: பாலிவுட் பாடகியின் மகிழ்ச்சிப் பதிவு

ஒரு அறை வீட்டிலிருந்து மாளிகைக்கு: பாலிவுட் பாடகியின் மகிழ்ச்சிப் பதிவு
Updated on
1 min read

பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கார் தான் கடந்து வந்த பாதை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர் நேஹா கக்கார். இந்தியன் ஐடல் என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அடையாளம் பெற்றார். அதன் பின் ஒரு தனியார் ஆல்பத்தை வெளியிட்டுப் பிரபலமானார். இன்று இந்தியா முழுவதும் இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான், ப்ரீதம், அமித் த்ரிவேதி, விஷால் சேகர் என கிட்டத்தட்ட சம காலத்தின் அனைத்து பாலிவுட் இசையமைப்பாளர்கள் இசையிலும் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பங்கேற்ற இந்தியன் ஐடல் நிகழ்ச்சியின் 11-வது சீஸனில் நடுவராக இடம்பெற்றது இவரது வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.

சில நாட்களுக்கு முன்பு நேஹா கக்கார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் வாங்கியுள்ள புதிய வீட்டின் புகைப்படத்தையும், தனது சிறுவயதில் குடும்பத்துடன் வசித்த வீட்டின் புகைப்படத்தையும் பகிர்ந்து, அதனுடன் தான் கடந்து வந்த பாதை குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "இது இப்போது ரிஷிகேஷில் எங்கள் மாளிகை. வலது பக்கம் இருப்பது நான் பிறந்த வீடு. அந்த வீட்டின் ஒரே அறையில் தான் நாங்கள் அனைவரும் வசித்தோம். அதே அறையில் என் அம்மா ஒரு மேஜை போட்டிருப்பார். அதுதான் அங்கள் சமையலைறையும். நாங்கள் வாடகைக்கு வசித்த வீடு அது. இதே நகரத்தில் எனது மாளிகையை நான் பார்க்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். எனது குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்றி. எனது ரசிகர்கள், நல விரும்பிகளுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in