

மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நடிகை கங்கணா ரணாவத் கூறியுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் 23 வயதான மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கீழே வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் குமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.. இந்தச் சூழலில் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ட்விட்டரில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.
அதில், "நிர்பயாவின் தாயா ஆஷா தேவியின் வேதனை, துயரத்தை முழுமையாக அறிகிறேன், உணர்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, தனது கணவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினியை மன்னித்துவிட்டார்.
அந்தச் சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஆஷா தேவியும், நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னிக்க வேண்டும். நிர்பயாவுக்காக நாம் மரண தண்டனை கேட்கவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால், மரண தண்டனைக்கு எதிரானவர்கள்" எனத் தெரிவித்தார்.
மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் இந்தக் கருத்துக்கு நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்களில் பலரும் ஆஷா தேவிக்கு ஆதரவாக இந்திரா ஜெய்சிங்க்குக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ‘பங்கா’ படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை கங்கணா ரணாவத்திடம், இந்திரா ஜெய்சிங்கின் கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கங்கணா, ''அந்த நால்வரோடு அவரையும் (இந்திரா ஜெய்சிங்) சிறையில் அடைக்க வேண்டும். அவருக்கு அது அவசியமானது. இவரைப் போன்ற பெண்கள்தான் இதுபோன்ற அரக்கர்களையும், கொலைகாரர்களையும் பெற்றெடுக்கக் கூடியவர்கள். இந்தக் கொலைகாரகளுக்கு அனுதாபம் காட்டுவதும் இவர்களைப் போன்றவர்களே'' என்று காட்டமாகத் தெரிவித்தார்.
கங்கணா நடித்துள்ள ‘பங்கா’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.