Published : 06 Jan 2020 04:42 PM
Last Updated : 06 Jan 2020 04:42 PM

ஜேன்என்யு மாணவர்கள் மீதான தாக்குதல்: பாலிவுட் நட்சத்திரங்கள் கண்டனம்

ஜேஎன்யுவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த நபர்கள் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்தது.

இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்று நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பாலிவுட் பிரபலங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அவற்றில் சில பதிவுகள்:

ரித்தேஷ் தேஷ்முக்

நீங்கள் ஏன் உங்கள் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறீர்கள்? ஏனென்றால் உங்களுக்கு நன்கு தெரியும் நீங்கள் செய்வது தவறு என்று. நீங்கள் செய்வது சட்டவிரோதமானது, தண்டனைக்குரியது. முகமூடி அணிந்த குண்டர்களால் மாணவர்களும், ஆசிரியர்களும் கொடூரமாகத் தாக்கப்படுவதைப் பொறுத்து கொள்ள முடியாதது.

டாப்ஸி

மீளமுடியாத சேதம். இங்கே என்ன நடக்கிறது? இதனைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது.

ராஜ்குமார் ராவ்

ஜேஎன்யுவில் நடந்து இருப்பது அவமானகரமானது. இதயத்தை நொறுக்கக்கூடியது. இந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தியா மிர்சா

எவ்வளவு நாள் இது தொடர்ந்து அனுமதிக்கப்படும். எவ்வளவு நாள் நீங்கள் கண்களை மூடி இருப்பீர்கள். அரசியல் மற்றும் மதத்தின் பெயரில் பாதுகாப்பில்லாதவர்கள் எவ்வளவு நாள் தாக்கப்படுவார்கள்.

ஸ்வரா பாஸ்கர்

இது திடீர் மோதல் அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்டது. கொடூரமான தாக்குதல். ஒரு தரப்பிலிருந்து நடத்தப்பட்டுள்ளது.

அனுராக் காஷ்யப் மற்றும் முகமத் ஷிஷன் அயூப் போன்ற பாலிவுட் பிரபலங்களும் ஜேன்என்யுவில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x