மனைவிக்கு வெங்காயக் காதணிகளைப் பரிசளித்த அக்‌ஷய்குமார்

மனைவிக்கு வெங்காயக் காதணிகளைப் பரிசளித்த அக்‌ஷய்குமார்
Updated on
1 min read

தனக்கு, கணவர் அக்‌ஷய்குமார் வெங்காயக் காதணிகளை பரிசளித்தது குறித்து நடிகை ட்விங்கிள் கன்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை ட்விங்கிள் கன்னா இருவருமே பாலிவுட்டின் பிரபல தம்பதி. சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் ட்விங்கிள் கன்னா. இவர் எழுத்துக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வபோது கணவர் அக்‌ஷய்குமார் பற்றிய பதிவுகளையும் நகைச்சுவை இழையோடு பதிவிட்டு வருவார் கன்னா.

தற்போது அக்‌ஷய்குமார் தனக்குப் பரிசளித்த வெங்காயக் காதணிகள் குறித்து, புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்விங்கிள் கன்னா பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "என் கணவர், கபில் சர்மா நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வந்தார். வந்ததும், 'இதைக் கரீனாவிடம் காட்டினார்கள். ஆனால் அவருக்கு இது பிடித்ததாகத் தெரியவில்லை. ஆனால் நீ இதை ரசிப்பாய் என எனக்குத் தெரியும். எனவே உனக்காக நான் இதை எடுத்துக் கொண்டு வந்தேன்' என்றார். சில நேரங்களில் சின்ன சின்ன, அபத்தமான விஷயங்கள் தான் உங்கள் இதயத்தைத் தொடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெங்காய தட்டுப்பாடு, விலையேற்றம் என நாடு இருக்கும் சூழலில், இந்த வெங்காயக் காதணிகள் விஷயம் நெட்டிசன்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in