Published : 07 Dec 2019 02:23 PM
Last Updated : 07 Dec 2019 02:23 PM

ஹைதராபாத் மக்களுக்கு கங்கணாவின் சகோதரி வேண்டுகோள்

கால்நடை பெண் மருத்துவர் உயிரோடு கொளுத்தப்பட்ட இடத்தில், கோயில் எழுப்ப வேண்டும் என்று கங்கணாவின் சகோதரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

நேற்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்தச் சம்பவத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கணாவின் சகோதரி ரங்கோலி சாந்தில். மேலும் தனது ட்விட்டர் பதிவில், "உண்மையான ஆண்கள், பெண்களைக் காப்பார்கள். பெண்களைத் துன்புறுத்தவும், பலாத்காரம் செய்யவும் யோசிக்கவே பயப்படும் ஒரு அற்புதமான எதிர்காலத்தை நோக்கியுள்ளோம். எனது தேர்வுகளுக்கும், நான் ஆதரித்தவர்களையும் நினைத்து என மனம் நிறைவடைகிறது.

இது புதிய இந்தியா. தென்னிந்திய மக்கள் பலர் நடிகர்களுக்காகக் கோயில் எழுப்புவார்கள் என்று எனக்குத் தெரியும். எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. அவர்கள் பிரியங்கா ரெட்டிக்கு, அவர் உயிரோடு கொளுத்தப்பட்ட இடத்தில், கோயில் எழுப்ப வேண்டும். தேவி சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் சக்தி பீடங்கள் எழுப்பியதைப் போல.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் மீது தவறான எண்ணம் எழுந்துவிடக் கூடாது. ஒரு இளம் சகோதரி இருக்கிறார். பிரியங்காவுக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்காவிட்டால் சகோதரியின் வாழ்க்கை சகஜமாக இருக்காது. இதைப் பற்றிச் சிந்தியுங்கள் ஹைதராபாத் மக்களே” என்று தெரிவித்துள்ளார் ரங்கோலி சாந்தில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x