Published : 26 Oct 2019 01:39 PM
Last Updated : 26 Oct 2019 01:39 PM

இந்தி சினிமாக்களை விடத் தென்னிந்திய சினிமாக்களே வசூலைக் குவிக்கின்றன: சல்மான் கான்

இந்தி சினிமாக்களை விடத் தென்னிந்திய சினிமாக்களே வசூலைக் குவிக்கின்றன என்று சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தபங் 3'. 'தபங்' வரிசை படங்களில் 3-ம் பாகமாக இது உருவாகியுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை சல்மான் கான், அர்ஃபாஸ் கான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் சென்னையில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார் சல்மான் கான்.

அதில் சல்மான் கான் பேசும் போது, "தென்னிந்திய சினிமாக்கள் எனக்கு எப்போதும் பிடிக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் படங்களை விரும்பிப் பார்ப்பேன். இங்கே இப்போது இந்தி சினிமாவை விடவும் ’பாகுபலி’, ’கே.ஜி.எஃப்’ எனத் தென்னிந்திய சினிமாக்கள் தான் வசூலைக் குவிக்கின்றன.

தமிழில் குறிப்பாக விஜய்யின் 'போக்கிரி' படத்தின் ரீமேக்கில் நடித்தேன். அவரது ’தெறி’, ’திருப்பாச்சி’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ’தபங் 3’ படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இந்தப் படம் தென்னிந்தியப் படம் போல்தான். இதில் அதிகமாகத் தென்னிந்தியக் கலைஞர்கள் தான் வேலை பார்த்துள்ளனர்.

பிரபுதேவா எங்களுடைய சொத்து. அவர் இப்படத்தை இயக்கியிருப்பது வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பது போன்றது. எனது அடுத்த படத்தையும் அவர் தான் இயக்குகிறார். தமிழ் உட்படப் பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. விரைவில் தமிழ் ரசிகர்களை நான் நேரில் சந்திப்பேன்” என்று பேசியுள்ளார் சல்மான் கான்.

'தபங் 3' படத்துக்கு முன்பாகவே மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா இணைந்துள்ள 'ராதே' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x