Last Updated : 24 Apr, 2015 12:40 PM

 

Published : 24 Apr 2015 12:40 PM
Last Updated : 24 Apr 2015 12:40 PM

இனவெறி சர்ச்சை: ஐஸ்வர்யா ராய் விளம்பரம் நிறுத்தம்

ஐஸ்வர்யா ராய் நடித்த நகைக்கடைக்கான விளம்பரத்தின் மீது எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, அந்த விளம்பரத்தை சம்பந்தப்பட்ட நகைக்கடை நிறுவனம் நிறுத்திக்கொண்டுள்ளது.

பிரபல நகைக்கடை விளம்பரத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நகைகளை அணிந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு அருகில் உடல் மெலிந்த சோர்வான கருப்பு நிறத்திலான குழந்தை ஒன்று அவருக்கு குடை பிடிப்பது போல அமைந்திருந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விளம்பரம் இனவெறியை பிரதிபலிப்பதாகவும், குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருப்பதாய் சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இந்தப் விளம்பரத்துக்கும் அதில் நடித்திருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் நகைகடைக்கும் பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சர்ச்சையை அடுத்து விளம்பரம் குறித்து ஐஸ்வர்யா ராய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராயின் செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா சதானந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "விளம்பரத்தில் இடம்பெற்ற முரணான காட்சிகளை எங்களது கவனத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விளம்பர படம் காட்சியாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படத்தை இந்த விளக்கத்துடன் நான் வெளியிடுகிறேன்.

ஆனால் காட்சியாக்கப்பட்டபோது இருந்ததும் விளம்பரம் வெளியிடப்பட்டதும் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஐஸ்வர்யா ராயை மட்டுமே வைத்து அவர்கள் காட்சி அமைத்தனர். அதன் பின்னர் ஃபோட்டோஷோப் செய்த காட்சிகள்தான் தற்போது எதிர்ப்புக்கு உரியதாக உள்ளது.

சம்பந்தப்பட்ட பிராண்டின் காட்சி தொடர்பு தொழில்நுட்ப துறையினர் அவர்களது பார்வையில் விளம்பரத்தின் இறுதி வடிவத்தை முடித்திருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயை மட்டும் தனித்து எடுக்கப்பட்ட படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனா சதானந்த் இணைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து விளம்பரத்தை திரும்ப பெறுவதாக அந்த நகைகடை சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகைகடை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளம்பரத்தில் ராஜவம்சத்தை சேர்ந்த பெண் கொண்டிருந்த பாரம்பரிய அழகை நேர்த்தியாக காட்டவே நாங்கள் திட்டமிட்டோம். இந்தத் தவறு எங்களை மீறி நடந்துள்ளது.

விளம்பரப் படம் குறிப்பிட்ட சமூகம் அல்லது தனி நபர்களின் உணர்வுகளை புண்படுத்துயிருந்தால் நாங்கள் அதற்கு வருந்துகிறோம். இந்த விளம்பரத்தை நாங்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x