

தனக்கு கிரிக்கெட்டும் பிடிக்காது, அதைவிட கிரிக்கெட் ரசிகர்களையும் பிடிக்காது என இயக்குநர் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்துள்ள நிலையில் பாலிவுட் பிரபலம் ராம்கோபால் வர்மா ட்விட்டரில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டுகள் சொல்லும் செய்தி, "இந்தியா தோல்வியடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. கிரிக்கெட்டை விட அதன் ரசிகர்கள் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது.
எனக்கு என் தேசத்தை பிடிக்கும், அதனால் கிரிக்கெட்டைப் பிடிக்காது. ஏனென்றால் என் நாட்டு மக்கள் வேலை செய்வதை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கின்றனர். இந்த கிரிக்கெட் வியாதியிலிருந்து என் நாட்டு மக்களை கடவுள் குணமடையச் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
இந்திய அணியை மீண்டும் மீண்டும் தோற்கடிக்குமாறும் மற்ற அணிகளை கேட்டுக் கொள்கிறேன். அப்போதாவது இந்திய அணி விளையாடுவதை நிறுத்தி, என் மக்கள் கிரிக்கெட் பார்ப்பதை மறப்பார்கள். சிகரெட் மற்றும் குடிப் பழக்கத்தை விட கிரிக்கெட் போதை தேசிய வியாதி." இவ்வாறு ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவரது பக்கத்திற்கு படையெடுத்து அவரை வசை பாடி வருகின்றனர். ஆனால் அவரது கருத்துக்கு கணிசமான ஆதரவும் குவிந்துள்ளது.