

‘ஆர்டிகிள் 15’ பாலிவுட் படத்தின் தணிக்கைச் சான்றிதழை ரத்துசெய்யக் கோரும் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. மேலும், உரிய அதிகாரிகளை நாடி தங்கள் குறைகளைத் தெரிவிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கி, ஆயுஷ்மான் குரானா நடித்த ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம், கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியானது.
சமுதாயத்தில் வதந்தி பரப்பும் விதமாகவும், சமூகத்தில் சாதி வெறுப்பை ஏற்படுத்தும் விதமாகவும் ஆட்சேபகரமான, சர்ச்சைக்குரிய வசனங்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதால், 'இந்தியாவின் பிரம்மன் சமாஜ்' என்ற மனுதாரர், திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இம்மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.
மேலும், ‘ஆர்டிகிள் 15’ படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, மனுதாரர் இது தொடர்பாக உரிய சட்டத்தின்கீழ் இடம்பெறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடவும் என்று தெரிவித்ததோடு, அவர்களிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்குமாறும் அமர்வு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.