மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கும் தனுஷ்

மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கும் தனுஷ்
Updated on
1 min read

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மறுபடியும் தனுஷ் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த தனுஷ், ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, ஆனந்த் எல் ராய் இயக்கினார். தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமின்றி, வசூலும் குவிந்தது.

‘ராஞ்சனா’ படத்தைத் தொடர்ந்து, அமிதாப் பச்சனுடன் சேர்ந்து ‘ஷமிதாப்’ இந்திப் படத்திலும் நடித்தார். ஆர்.பால்கி இயக்கிய இந்தப் படத்தில், அக்‌ஷரா ஹாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், ஏராளமான பிரபலங்கள் கெஸ்ட் ரோலில் நடித்தனர். 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், 4 வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் இந்திப் படத்தில் நடிக்கிறார் தனுஷ் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய், இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். தொடர்ந்து, துரை செந்தில் குமார் இயக்கத்திலும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களிலுமே அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இந்தப் படங்களை முடித்தபிறகு, அனேகமாக அடுத்த ஆண்டு (2020) தனுஷின் இந்திப்பட ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’, தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வருகிற 21-ம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in