

பாலிவுட்டின் உண்மை முகத்தைத் தோலுரிப்பேன் என சவால்விட்டிருக்கிறார் முன்னணி நடிகையான கங்கணா ரணாவத்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'மணிகர்ணிகா'. ஜான்சிராணியின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்கூடம் ஒன்றில் 'மணிகர்ணிகா' படத்தின் சிறப்பித் திரையிடல் நடைபெற்றது.
நிகழ்வில் முடிவில் பேசிய கங்கணா, "ஒட்டுமொத்த வகுப்பறையும் உங்களுக்கு எதிராகத் திரண்டு உங்களை பயமுறுத்தினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் பாலிவுட் திரையுலகம் எனக்கெதிராக அணி திரண்டு செயல்படுகிறது. அவர்களுக்கு வெட்கமே இல்லை. இப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதை அவர்கள் முகத்துக்கு நேராகவே நான் சொல்கிறேன்.
சிலர் என் தாத்தா அளவுக்கு வயதானவர்கள். ஆனால், பாலியல் சீண்டல், குடும்ப ஆதிக்கம், ஊதியப் பாகுபாடு என பல்வேறு குறைகள் அவர்களிடம் உள்ளன. இனியும் நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. எல்லோரையும் வெளிப்படையாக அடையாளம் காட்டப் போகிறேன். என்னை அடக்கி ஒடுக்குவதன் மூலம் அவர்கள் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர்" என்றார்.
ஜான்சிராணி போன்ற மாபெரும் வீராங்கனையின் வாழ்க்கை சரிதத்தை தழுவிய படத்தைப் பற்றி பேச இவர்கள் ஏன் தயங்குகின்றனர்? ஜான்சிராணி என் சொந்தக்காரரா? அவர் தேசத்தில் அனைவருக்கும் சொந்தக்காரரே.
நான் பாலிவுட்டில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்துப் பேசுகிறேன் என்பதாலேயே என்னை எல்லோரும் எதிர்க்கின்றனர் என்றார் கங்கணா.