Published : 01 Jul 2018 07:15 PM
Last Updated : 01 Jul 2018 07:15 PM

மன்மோகன் சிங்காக வாழ்வது எத்தனைக் கடினம்: நடிகர் அனுபம் கேர் பகிர்வு

நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் கடினமானது மன்மோகன் சிங் கதாபாத்திரமே என்கிறார் நடிகர் அனுபம் கேர்.

பொதுவாக மன்மோகன் சிங்கைப் பற்றிய பார்வை என்னவெனில் அவர் எந்த வித முகபாவங்களையும் காட்டாதவர், விளக்கமுடியாத குணாம்சம் கொண்டவர், கல்லாய்ச்சமைந்த உணர்வு காட்டுபவர் என்பதுதான்.

சஞ்சய் பாரூவின் The Accidental Prime Minister என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் மன்மோகனாக நடிப்பவர் அனுபம் கேர், இவர் மன்மோகன் சிங் தலைமை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடுமையான விமர்சகரும் கூட.

இவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “மன்மோகன் எப்போதும் சுயத்தை மறைத்துக் கொள்பவர், தன்னை நோக்கி கவனத்தைத் திருப்ப விரும்பாதவர், ஒரே சமயத்தில் அவர் மகிழ்ச்சியாக இருந்தாலும் எரிச்சலடைந்தாலும் அவர் அதை வெளிப்படுத்த மாட்டார், பெரிய அளவில் விளங்க முடியா, விளக்க முடியா ஒரு குணம் கொண்டவர், அவரை விளங்கிக் கொள்ள முடியாத தன்மையிலும் அவரை வாசிக்கமுடியாத தன்மையிலும் நான் அவரது கதாபாத்திரமாக குணாம்சம் காட்டி நடிப்பது எவ்வளவு பெரிய கடினமான வேலை?” என்றார்.

ஏன் கடினம் எனில் அனுபம் கேர் மிகவும் செயலூக்கமுள்ள, பாவனைகள் மிகுந்த, நுணுக்கமானது முதல் விஸ்தாரமான உடல்மொழியக் கொண்டு அசத்துபவர் அனுபம் கேர், ஆனால் இம்முறை, “என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் தியானம் மேற்கொண்டேன். ஆனாலும் நான் எனக்குள் அனுபம் கேராகவே இருந்தால்தான் மன்மோகன் என்ற ஆளுமையை வெளிப்பாடு அடையச்செய்ய முடியும், கொண்டு வர முடியும்.

காந்தியாகவோ, சர்ச்சிலாகவோ நடிக்க வேண்டுமெனில் நமக்கு ஓர் ஐடியா கிடைத்துவிடும். ஆனால் சமகாலத்தில் இருக்கும் ஓர் ஆளுமையைக் கண்முன் கொண்டு வரும் போது அவரது அக உலகத்தை நாம் கற்பனை செய்து நம்பத்தகுந்த ஒரு மனிதனாக நாம் செய்து காட்ட வேண்டியுள்ளது. என்னுடைய மிகப்பெரிய சவால் என்னவெனில் டாக்டர் மன்மோகன் சிங்கை மனிதமாக்கி பொது பிம்பத்தை ஆழமான சொந்த ஆய்வுக்குட்படுத்துவதுதான்.

நான் தேசிய நாடகப்பள்ளியைச் சேர்ந்த தொழில்பூர்வ நடிகர், மேலும் பலவிவகாரங்களில் நான் 10 ஆண்டுகளுக்கு முன்பாக வைத்திருந்த கருத்துக்கள், பார்வைகள் இப்போது அதே வடிவத்தில் இருக்காது. ஒருநடிகராக நமக்கு சவால் அளிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும். நாம் எளிதில் கணிக்க முடியாத கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்.

எனக்கு மன்மோகன் சிங் மீதுள்ள தனிப்பட்ட விமர்சனம் என்னவெனில் அவர் செய்ய விரும்பாத விஷயங்களை அவர் செய்ய சம்மதித்திருக்கக் கூடாது என்பதே, ஆனால் அரசியலும் அதிகாரமும் சிலபல நிர்பந்தங்களினால் வருவதே. ஆனால் என்னுடைய அரசியல் புரிதல் என்னுடைய கதாபாத்திரத்தை தாக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்வதுதான். ஏனெனில் இது நடிப்பு என்ற பிரதேசத்திலிருந்து தத்துவம் என்பதற்குள் செல்வதாகும். புறவயமான ஒரு நடுநிலையிலிருந்து அகவயமான, தனிப்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் நுழைவதாகும். என்னைப் பொறுத்தவரை மன்மோகன் சிங் ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் போன்றவர். நல்ல நோக்கமுடைய நபர், சாமர்த்தியம், சாதுரியம் கிடையாது, அரசியலுக்காக வளர்க்கப்பட்டவர் இல்லை என்பதே.

மன்மோகன் சிங்கைச் சந்தித்து அவரது நடை உடை பாவனைகளைக் கொஞ்சம் பார்த்திருக்கலாமே என்று பலரும் கேட்கின்றனர், ஆனால் அம்மாதிரி ஒரு முயற்சிக்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டால்...நான் நேர்மையான முறையில் அவரது கதாபாத்திரத்தை நடித்து வரும் நிலையில் அவர் மறுப்பதை நான் விரும்பவில்லை” என்றார் அனுபம் கேர்.

இந்தப் படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் விஜய் குத்தே, டிசம்பரில் இந்தப் படம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x