நானா படேகர் ஒரு பொய்யர்: தனுஸ்ரீ தத்தா காட்டம்

நானா படேகர் ஒரு பொய்யர்: தனுஸ்ரீ தத்தா காட்டம்
Updated on
1 min read

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோதுநானா படேகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக போலீஸிலும் புகார் கொடுத்தார். இதுகுறித்து சமீபத்தில் நானா படேகர் அளித்த பேட்டியில், “அது அனைத்தும் பொய். உண்மை என்ன என்று எனக்குத் தெரியும்” என்று கூறியிருந்தார். அதற்குநடிகை தனுஸ்ரீ தத்தா, நீண்ட பதிவின் மூலம் பதிலளித்துள்ளார்.

அதில் அவர், “என் புகாருக்கு பதிலளிக்க ஏன் 6 ஆண்டுகள் ஆனது? கடந்த சில வருடங்களாக தெரியாத நபர்களால் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானேன். நான் எங்கு சென்றாலும் சிலர் பின்தொடர்ந்தார்கள். எனக்கு திடீர் விபத்துகள் ஏற்பட்டன. என்னைச் சுற்றி விநோதமான சம்பவங்கள் நடந்துகொண்டே இருந்தன. அதில் இருந்து தப்பிப் பிழைத்தேன். இப்போது அவர் பயந்துவிட்டார்.

இந்தி சினிமா துறையில் அவரை ஆதரித்தவர்கள், ஓரங்கட்டி விட்டனர். நானா படேகர் ஒரு பொய்யர். நடிகை டிம்பிள் கபாடியா கூட ஒரு யூடியூப் பேட்டியில் அவரை ‘அருவருப்பானவர்’ என்று கூறியிருந்தார். அவரும் பொய் சொன்னாரா?” என்று கேட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in