Published : 07 Oct 2023 05:17 AM
Last Updated : 07 Oct 2023 05:17 AM

ரூ.5,000 கோடி சூதாட்ட செயலி மோசடி வழக்கு: நடிகைகள் ஷரத்தா கபூர், ஹுமா குரேஷி, ஹினா கானுக்கு நோட்டீஸ்

மும்பை: சூதாட்ட செயலி மோசடி வழக்குத் தொடர்பாக நடிகைகள் ஷரத்தா கபூர், ஹுமாகுரேஷி, ஹினாகான் உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவர் சத்தீஸ்கரின் பிலாய்பகுதியில் பழச்சாறு கடை நடத்திவந்தார். இவர் நண்பர் ரவி உப்பால்.இவர் டயர் கடை நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இருவரும் துபாய் சென்றனர். அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்துஉள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில் துபாயில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி குறித்தும் அந்தசெயலி வாயிலாக ரூ.5,000 கோடிஅளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதும் அமலாக்கத் துறைக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சவுரப் சந்திரகருடன் தொடர்புடைய அனைத்து நடிகர், நடிகைகளையும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. நடிகர் ரன்பீர் கபூருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் காலஅவகாசம் கோரியுள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகைகள் ஷரத்தா கபூர், ஹுமா குரேஷி, ஹினா கான், நடிகர் கபில் சர்மா உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர்களும் நேரில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் கோரியுள்ளனர்.

துபாயில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றதற்காக அவர்கள் எவ்வாறு பணம் பெற்றனர், சவுரப் உடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

நடிகை சன்னி லியோன் உட்பட 20-க்கும் மேற்பட்ட நடிகர்,நடிகைகள் திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x