

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.395 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படம் முதல்நாள் ரூ.140 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. இரண்டாவது நாளில் ரூ.240 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. மூன்று நாட்களையும் சேர்த்து உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வசனங்கள் குறித்த சர்ச்சையும் ஒருபுறமும், எதிர்மறை விமர்சனங்கள் மறுபுறமும் எழுந்த நிலையில் விடுமுறை நாட்களுக்குப் பிறகு படத்துக்கான வசூல் குறைந்துள்ளது.
முதல் மூன்று நாட்களில் ரூ.340 கோடியை வசூலித்த படம், அடுத்த இரண்டுகளையும் சேர்த்து ரூ.55 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. எனினும், ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.395 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.