Published : 05 Jun 2023 01:12 PM
Last Updated : 05 Jun 2023 01:12 PM

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

சுலோச்சனா லட்கர்

மும்பை: பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94.

கடந்த சிலகாலமாக வயது மூப்பு தொடர்பான பிரச்சின்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த மூன்று வாரங்களுக்கும் முன்பு, உடல்நிலை மோசமடையவே, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடம் சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா, நேற்று (ஜூன் 04) மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

சுலோச்சனாவில் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “சுலோச்சனா அவர்களின் மறைவு இந்திய சினிமா உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறக்க முடியாத நடிப்புத் திறன் நமது கலாச்சாரத்தை வளப்படுத்தியது மட்டுமின்றி தலைமுறைகள் கடந்தும் மக்களின் அன்பைப் பெற்றது. அவரது சினிமா மரபு அவரது படங்கள் மூலம் வாழும். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்த சுலோச்சனா, 1946ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். ‘கட்டி பட்டங்’, ‘மேரே ஜீவன் சாதி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மராத்தியில் மட்டுமே 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்தியில் அவர் நடித்த ‘கோரா ஆர் காலா’, ‘சம்பூர்ண ராமாயணா’ ஆகிய படங்கள் மிகவும் பிரபலம்.

சினிமாவில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக 1999ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2004ல் அவருக்கு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 'மகாராஷ்டிர பூஷன்' விருதும் அவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x