Last Updated : 13 Oct, 2017 06:46 PM

 

Published : 13 Oct 2017 06:46 PM
Last Updated : 13 Oct 2017 06:46 PM

இனி திரையரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்பனை இருக்காது: அபிராமி ராமநாதன்

இனி திரையரங்குகளில் அதிகமான விலையில் டிக்கெட் விற்பனை இருக்காது என்று அபிராமி ராமநாதன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்று (அக்டோபர் 13) முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழ் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்பேச்சுவார்த்தையின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் அபிராமி ராமநாதன் பேசியதாவது:

படத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விண்ணப்பித்து டிக்கெட் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆகையால் சிறுபடங்கள் வரும் போது விண்ணப்பித்து டிக்கெட் விலையைக் குறைத்து கொள்வோம்.

எம்.ஆர்.பி. விலை குறித்து விஷால் பேசியிருக்கிறார். அவரைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் உள்ளன. எங்களைப் பொறுத்தவரை எம்.ஆர்.பி. விலையில் தான் கேண்டீனில் விற்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு இருப்பதால் அது குறித்து எவ்வித பிரச்சினையுமே இல்லை. பார்க்கிங் கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கிறது. ஆகையால் அது குறித்துப் பேச முடியாது.

அரசாங்கத்திடம் நாங்கள் கேட்ட டிக்கெட் விலையைக் கொடுத்துவிட்டார்கள். ஆகையால், பெரிய படங்களூக்கு இனிமேல் அதிகமான விலையில் டிக்கெட் விற்பனை இருக்காது. டிக்கெட் விலையை அதிகமாக விற்கும் திரையரங்குகளுக்கு உறுதுணையாக இருக்க மாட்டோம். தமிழக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

நாங்கள் தயாரிக்கும் உணவுகளுக்கு விலையை நிர்ணயம் செய்வது எங்களுடைய உரிமை. ஆன்லைன் டிக்கெட் கட்டணம் தொடர்பாக கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x