Published : 24 May 2023 11:49 AM
Last Updated : 24 May 2023 11:49 AM

வருகிறது ‘பிச்சைக்காரன் 3’ - உறுதி செய்த விஜய் ஆண்டனி

சென்னை: ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகத்தை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார். இப்படம் 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவிருப்பதை விஜய் ஆண்டனி உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், இப்படம் முதல் இரண்டு பாகங்களுக்கு தொடர்பில்லாதது என்றும், இது முற்றிலும் புதிய கதைக்களத்தைக் கொண்டு உருவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இப்படம் 2025-ல் தான் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது விஜய் ஆண்டனி ‘ரத்தம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வல்லி மலை’, ‘அக்னி சிறகுகள், ‘கொலை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களின் ரிலீஸுக்குப் பிறகே ‘பிச்சைக்காரன் 3’ பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x