Published : 05 Oct 2017 09:18 AM
Last Updated : 05 Oct 2017 09:18 AM
புதிய இளைஞர்களை நற்பணி மன்றத்தில் இணைக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என்று ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீப காலமாக தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் கமல்ஹாசன், சென்னையில் நேற்று தனது ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்ததாக சில நிர்வாகிகள் கூறியதாவது :
மக்கள் பிரச்சினைகளில்...
கிராமம் தொடங்கி நகரம் வரையிலான அனைத்து வெகுஜன மக்களுக்கும் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிய வேண்டும். அதற்கான பணிகளில் நம் நற்பணி மன்றத்தினர் தீவிரமாக செயல்பட வேண்டும். மேலும், தற்போது மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வரும் டெங்கு, கல்வி சார்ந்த பிரச்சினை, மருத்துவ உதவி மற்றும் விவசாயம் ஆகியவை குறித்து அதிக கவனம் செலுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். தொடர்ச்சியாக ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.
இளைஞர்கள் இணைய வாய்ப்பு
மேற்காணும் நற்பணிகள் தொடரும்போதுதான் பல புதிய இளைஞர்கள் நமது நற்பணி மன்றத்தில் இணைய வாய்ப்புள்ளது. அவ்வாறு இளைஞர்கள் இணையும் போதுதான் நமது நற்பணி மன்றம் மேலும் வளரும். அதன்மூலம் மேலும் பல்வேறு ஆக்கப் பணிகளை தீவிரமாக செயல்படுத்த முடியும்.
இவ்வாறு ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாக அவரது மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT