Published : 01 Sep 2017 02:33 PM
Last Updated : 01 Sep 2017 02:33 PM
பெப்சி வேலைநிறுத்தம் தொடர்பாக, "குடும்பத்துக்குள் எதிர்மறை விஷயங்களை நிறுத்துங்கள்" என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தங்களுடைய கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை பெப்சி தொழிலாளர்கள் இன்று (செப்டம்பர் 1) முதல் தொடங்கியுள்ளார்கள். இதனால் 'காலா', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன், பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நம் உடலின் ஒவ்வொரு அணுவும் வியர்வை சிந்த தயாராக இருக்கும்போது நாம் வேலை செய்யாமல் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. சினிமாவில் காதல், நட்பு, நேர்மறை எண்ணம், ஒற்றுமை என பல விஷயங்களைப் பேசுகிறோம். ஆனால் நாம் பேசுவதை பின்பற்றுவதில்லை.
முக்கியமான பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வை இங்கு தேடுவதில்லை. மகிழ்ச்சியாக, ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்துக்குள் என்ன சாபம் நுழைந்து, என்ன ஆனது எனத் தெரியவில்லை.
சமரச புரிதல், கலந்துரையாடலுடன் இந்த உலகில் எதற்கும் தீர்வு காணலாம். தலைமையில் இருப்பவர்கள் முடிவெடுக்க இதுதான் சரியான நேரம். ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து, ஒருவரை பற்றி ஒருவர் புகார் சொல்வதை விட, ஒரு அறையில், நல்ல மனநிலையில் ஒன்றாக உட்கார்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்கலாம். குடும்பத்துக்குள் இந்த எதிர்மறை விஷயங்களை நிறுத்துங்கள். தயவு செய்து ஒவ்வொரு வார இறுதியிலும் நடக்கும் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்கப் பாருங்கள்.
இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT