Last Updated : 06 Sep, 2017 12:50 PM

 

Published : 06 Sep 2017 12:50 PM
Last Updated : 06 Sep 2017 12:50 PM

‘ஜூலி 2’ - வயது வந்தவர்களுக்கான குடும்பத் திரைப்படம்: பஹ்லஜ் நிஹலானி

திரைப்படத் தணிக்கைத்துறை தலைவராக இருந்த பஹ்லஜ் நிஹலானி, தான் விநியோகிக்கும் ‘ஜூலி 2’ திரைப்படத்தை, சுத்தமான, வயதுவந்தவர்களுக்கான படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஸ்பெக்டர்’ படத்தின் முத்தக்காட்சி நீளத்தை குறைத்தது, ‘உட்தா பஞ்சாப்’ படத்தில் 89 கட் வேண்டும் எனக் கூறியது, ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ படத்துக்கு சான்றிதழ் தர மறுத்தது என தணிக்கைத்துறை தலைவராக இருந்தபோது பல சர்ச்சைகளில் சிக்கியவர் பஹ்லஜ் நிஹலானி. அவர் அந்த பதவியிலிருந்து நீங்கிய பின்பும், ஒரு சில படங்களை எதிர்த்து புகார்கள் தெரிவித்து வந்தார்.

தற்போது, ராய் லட்சுமி நடிப்பில், ‘ஜூலி 2’ என்ற படத்தை அவர் விநியோகிக்கவுள்ளார். ஒரு பெண், அரை நிர்வாணமாக கடற்கரையில் படுத்திருப்பது போல படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ட்ரெய்லரிலும் பல கவர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நிஹலானி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நீங்கள் சென்சார் செய்திருந்தால், இந்தப் படத்துக்கு எத்தனை கட் கொடுத்திருப்பீர்கள் என்று கேட்டதற்கு, "அது இனி எனது வேலை இல்லை. அதற்காக நியமனம் செய்யப்பட்டவர்கள் அதை முடிவு செய்து கொள்ளட்டும். இது சுத்தமான, வயதுவந்தவர்களுக்கான படம்" என்று பதிலளித்தார்.

மேலும், "நான் இருந்திருந்தால், கட் தராமல் ‘ஏ’ சான்றிதழ் தந்திருப்பேன். இந்தப் படத்தில் ஆபாசமோ, கெட்ட வார்த்தைகளோ இல்லை. இது முழுமையான, வயது வந்தவர்களுக்கான குடும்பத் திரைப்படம்" என்றார்.

‘ஜூலி 2’ போன்ற படத்தை விநியோகிப்பதால், நீங்கள் இந்திய கலாச்சாரத்தை இனி பின்பற்றாதவரா என்று கேட்டதற்கு, "இது எனது தொழில். இது வயது வந்தவர்களுக்கான படம். நான் யு சான்றிதழ் கேட்கவில்லையே. ஏ சான்றிதழ் தான் கேட்கிறேன்.

நான் இன்னும் இந்தியக் கலாச்சாரத்தை பின்பற்றுபவன் தான். அது நம் மண்ணில் உள்ளது. நமது கலாச்சாரத்தை தாண்டி இங்கு எதுவும் பெரிதில்லை. நான் இன்றும், என்றும் அப்படித்தான் இருக்கிறேன்" என்றார்.

படத்தைப் பற்றிய ஊடகத்தின் கேள்விகளால் சற்றே கோபமடைந்த படத்தின் இயக்குநர் தீபக் ஷிவ்தாசானி, "வெறும் அட்டையைப் பார்த்து ஒரு புத்தகத்தை மதிப்பிடாதீர்கள்" என்று காட்டமாகக் கூறினார்.

மேலும் பேசிய நிஹலானி, "என்ன செய்ய வேண்டும் என்பதை தணிக்கைத் துறை முடிவெடுக்கும். அதை படத்தின் விளம்பரத்துக்காக நாங்கள் பயன்படுத்தமாட்டோம். இது எனது பயணம். நான் ஒரு போர்வீரன். காயப்பட்டாலும் கடைசி வரை போராடுவேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x