Published : 20 Mar 2023 02:48 PM
Last Updated : 20 Mar 2023 02:48 PM

60 சவரன் தங்கம், வைர நகைகள் மாயம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீஸில் புகார்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா

தனது வீட்டிலிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது அவர் விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினி சிறப்புத்தோற்றத்திலும் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கடந்த 2019-ம் ஆண்டு தங்கை சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பின்பு 60 சவரன் தங்க, வைர நகைகளை லாக்கரில் பூட்டி வைத்திருந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தன. பின்னர் முன்னாள் கணவர் தனுஷூடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறியபோது அங்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனுக்கு குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளில் வைக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் கடந்த மாதம் போயஸ் கார்டன் வீட்டின் லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் இருந்த தங்க, வைர, நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன் எனவும், தங்கள் வீட்டுப் பணியாளர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x