Last Updated : 27 May, 2017 03:37 PM

 

Published : 27 May 2017 03:37 PM
Last Updated : 27 May 2017 03:37 PM

மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சர்ச்சை: லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

சமீபத்திய 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனை அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக சாடினார்கள். அனைவரது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இந்நிகழ்ச்சி குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது:

"காலை வணக்கம். ஒவ்வொரு முறை சர்ச்சை வரும்போதும், விமர்சனங்களை எதிர்கொள்ள நான் சற்று அவகாசம் எடுத்துக் கொள்வேன். ஏனென்றால் அந்த நேரத்தில் நான் என்னையே கேள்வி கேட்டுக் கொள்வேன். சமீபத்தில் ஒளிபரப்பான குழந்தை மீதான பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பந்தப்பட்ட பகுதியும் அப்படித்தான்.

இந்த நிகழ்ச்சியின் கரு, பெரிதாக படிக்காதவர்களிடம் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கம் மற்றும் விழிப்புணர்வில் எனக்கு பரிபூரணமாக நம்பிக்கை இருக்கிறது. பிரச்சினை, நிகழ்ச்சியின் வடிவத்தில் தான். அது நான் இந்த நிகழ்ச்சியை செய்வதற்கு முன்னாலிருந்தே 5 வருடங்களாக இருக்கிறது. வியாபார ரீதியான வடிவம் அது. அதை மாற்ற நினைத்தால் எங்களால் தொடர்ந்து நிகழ்ச்சி செய்ய முடியாமல் போகலாம். அந்த தளம் கிடைக்காமல் போகலாம்.

அப்படி கிடைக்காமல் போனால் என்ன நடக்கும்? பாதிக்கப்பட்டவர்கள், மாற்றாக எதைத் தேடிப் போவார்கள்?

உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒளிபரப்பான பகுதியில், பாதிக்கப்பட்ட பெண் குழந்தையைப் பெற்ற பின், அந்தப் பெண்ணின் குடும்பம் சம்பந்தப்பட்ட நபர் மீது 7 வருடங்களுக்கு முன்னால் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றது. தவறு செய்தவர் நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார். அந்தப் பெண் போலீஸுக்கு செல்லாமல் குற்றத்தை வெளியில் கொண்டு வர வேண்டும் என சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தார். இந்த நிகழ்ச்சி இல்லையென்றால் அவர் அமைதியாக பாதிப்பை சந்தித்து கொண்டே இருந்திருப்பார். குற்றவாளியும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி வாழ்ந்திருப்பார்.

அந்தப் பெண் இப்போதும் புகாரளிக்க மறுத்துவிட்டது உண்மைதான். எங்களால் அவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் குற்றம் வெளியே வந்தது. சிறிய விழிப்புணர்வு உண்டாக்க முடிந்தது. முக்கியமாக, குற்றவாளிக்கும், அவரைப் போன்றவர்களுக்கும் இனி குற்றம் வெளியே வரும் என்ற பயம் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் இப்படி பொது ஊடகத்தின் முன் வந்துவிடுவார்கள் என்பது தெரியும்.

அந்த சூழலில் எது சரியானதோ அதை செய்தோம். அப்படியான பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விட, சென்று முறையிட வேறு எளிய நடைமுறைகள் வரும்போது இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.

நிகழ்ச்சியை குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு நமது சமுதாயத்தில் வேறொரு மாற்று தளத்தை உருவாக்க உழைக்குமாறு அவதூறு சொல்பவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அன்று நம் சமுதாயத்துக்கு சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி தேவைப்படாது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x