Published : 27 Jan 2023 07:44 AM
Last Updated : 27 Jan 2023 07:44 AM

புகழஞ்சலி | கலைமாமணி ஜூடோ ரத்தினம் - 1,500+ படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குநர்!

வேலூர்: தமிழ் திரைப்பட பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரைச் சேர்ந்தவர் பிரபல சண்டை பயிற்சி இயக்குநர் கலைமாமணி ஜூடோ ரத்தினம் (93). 1980-ம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். சகலகலா வல்லவன், முரட்டுக்காளை, பாயும்புலி, நெற்றிக்கண், நல்லவன் என பல்வேறு வெற்றிபடங்களில் இவரது சண்டை காட்சிகள் பெரிதும் பேசப்பட்டுள்ளன.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த கிராப்தர் படத்துக்கு சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1959-ம் ஆண்டு தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநராக அறிமுகமானார். சுந்தர்.சி நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தில் ஜூடோ ரத்தினம் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜூடோ ரத்தினம் நேற்று மாலை 4.10 மணிக்கு காலமானார். அவருக்கு 3 மகன்கள், 5 மகள்கள். ஜூடோ ராமு என்ற மகன் திரைப்பட சண்டை பயிற்சியாளராகவும், பகத்சிங் என்பவர் ஒளிப்பதிவாளராகவும் உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்றவர். ஜூடோ ரத்தினத்தின் உடல் சென்னையில் சண்டை பயிற்சியாளர் சங்கத்தில் இன்று திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று மாலை மீண்டும் குடியாத்தம் நகருக்கு கொண்டுவரப்படும் அவரது உடல் நாளை (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.

அமைச்சர், மார்க்சிஸ்ட் இரங்கல்

ஜூடோ ரத்தினம் மறைவுக்கு செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியாத்தம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமகள் பஞ்சாலை சங்க சிஐடியு முன்னாள் தலைவர் செயலாளராக செயல்பட்டதோடு, குடியாத்தம் பகுதியில் இளைஞர்களுக்கு சண்டை பயிற்சி கொடுத்தவர் என அக்கட்சியினர் நினைவுகூர்ந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x