

இந்தியாவில் வெளியாகும் திரைப்படங்களை நிர்வகிக்கவும், ஆவணப்படுத்தவும் திரைப்படப் பிரிவு, திரைப்பட விழா இயக்குநரகம், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகிய பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த 4 அமைப்புகளையும் இணைக்க, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை தெரிவித்தது. அதை ஏற்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்குத் திரையுலகினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த 1 ம் தேதி முதல் 4 அமைப்புகளும் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.எஃப்.டி.சி) அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃபிலிம் டிவிஷன் ஆஃப் இந்தியா, என்எஃப்ஏஐ, டிஎஃப்எஃப் ஆகியவை இழுத்து மூடல். வரலாறு தங்களுக்கு சாதகமாக இல்லாதபோது அதை அழிப்பதே கோழைகளின் செயல். வரலாற்றுக் காட்சிகளின் மூலப்பொருட்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புவோம்” எனக் கூறியுள்ளார்.