Published : 06 Dec 2016 08:18 PM
Last Updated : 06 Dec 2016 08:18 PM

பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பினார் அஜித்

பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த தமிழகம் திரும்பிய அஜித், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலில் செலுத்தினார்.

சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு சுமார் 11.30 மணிக்கு காலமானார் என்பதை அஜித்துக்கு தெரியப்படுத்தினார்கள். இச்செய்தி அவரை மிகவும் சோகப்படுத்தியது. கண்டிப்பாக நேரில் அஞ்சலி செலுத்தியாக வேண்டும் என்று உடனடியாக கிளம்பினார்.

பல்கேரியாவில் இருந்து உடனடியாக விமானம் எதுவும் கிடைக்காததால், ரோமேனியா நாட்டிற்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், அஜித் விமானத்தில் ஏறிவிட்டார். இதனால், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

புதன்கிழமை அதிகாலை சென்னை திரும்பிய அஜித், மனைவி ஷாலினியுடன் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x