Published : 14 Dec 2022 06:31 PM
Last Updated : 14 Dec 2022 06:31 PM

“நான் கருவுற்று இருந்ததை அறிவிக்க தயங்கியது ஏன்?” - ஸ்ரேயா பகிர்வு

‘நான் கருவுற்றுஇருந்ததை மறைக்க பல காரணங்கள் இருந்தன; முக்கியமாக அதை நான் வெளிப்படுத்தியிருந்தால் எனக்கு பட வாய்ப்பை கொடுக்க யோசித்திருப்பார்கள்” என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் - ஆண்ட்ரே கோஷீவ் தம்பதிகளுக்கு கடந்த 2021 ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி குழந்தை பிறந்தது. ஸ்ரேயா தான் கர்ப்பமானது குறித்து வெளியில் அறிவிக்காத நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது தெரிவித்துள்ளார். தான் கருவுற்றிருந்தது குறித்து வெளிப்படுத்துவதில் அதீத பயம் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிங்க் வில்லா செய்தித் தளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு அதீத பயம் இருந்தது. எனது கர்ப்பத்தைப் பற்றி நான் பேசாததற்கு முக்கியக் காரணம் அதை நான் எனக்கான நேரமாக மாற்ற விரும்பினேன். மகள் ராதா வயிற்றிலிருக்கும்போது அவளுடன் நேரத்தை செலவிட விரும்பினேன். உடல் எடை கூடியிருந்தேன். மக்கள் என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், என் குழந்தை மீது கவனம் செலுத்த நினைத்தேன்" என்றார்.

மேலும், “இதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், நான் கருவுற்றது குறித்து வெளிப்படுத்தியிருந்தால் எனக்கான பட வாய்ப்புகளை கொடுக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வார்கள் என பயந்தேன். இது ஒரு காட்சி ஊடகம் என்பதால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இறுதியாக நான் கருவுற்றிருந்ததை அறிவித்தபோது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன்.

மகள் ராதா ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது நான் எடையை குறைத்துவிட்டேன். பொதுவாக எந்த ஆண் நடிகரிடமும் ‘உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறதே நீங்கள் எப்படி மீண்டும் நடிக்கப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்படுவதேயில்லை. பெண்கள் அனைவரும் தங்கள் குழந்தைகள் நலமாக இருப்பதை உறுதி செய்துகொண்டு ஆண்கள் வேலைக்குச் செல்வதையும் உறுதிசெய்கிறார்கள்.

பொதுவாக குழந்தை வளர்ப்பில் பெற்றோர் இருவருக்கும் சமபங்கு உண்டு. ஆனால் பெண்களிடம் மட்டுமே இந்தக் கேள்வியை இடைவிடாமல் கேட்கிறார்கள். நான் கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாது என்பதால் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்கவில்லை” என்றார். அண்மையில் ஸ்ரேயா நடிப்பில் ‘த்ரிஷ்யம் 2’ இந்தி படம் வெளியாகி ரூ.200 கோடி வசூலை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x