Published : 04 Nov 2022 08:57 PM
Last Updated : 04 Nov 2022 08:57 PM

சன்னி லியோன் மனிதநேயம் மிக்கவர் - நடிகர் ஆர்.கே.சுரேஷ் புகழாரம்

நடிகை சன்னி லியோன் மனிதநேயம் மிக்கவர் என நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே சுரேஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படமான இது, விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் பேசுகையில், "நகை சன்னி லியோன் மனிதநேயம் மிக்கவர். இந்த படம் பற்றி சதீஷ் என்னிடம் கூறியபோது, ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சமும் இந்த படத்தில் இருப்பதை உணர முடிந்தது. டார்க் காமெடி திரைப்படங்கள் இப்போது அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் இந்த திரைப்படம் ஹாரர் உடன் கலந்த டார்க் காமெடி திரைப்படம். படம் நன்றாக வந்துள்ளது. ஒரு புதிய தயாரிப்பாளர் நமது திரைத்துறைக்கு வந்து இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டியது நமது கடமை" என்றார்.

இயக்குநர் தங்கர் பச்சான் பேசுகையில், ''திரைப்படங்கள் மக்கள் வாழ்வில் ஓர் அங்கமாக திகழ்கின்றன. சிறிய திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு தர வேண்டும். நேர்மையான விமர்சனம்தான் திரைப்படத்திற்கு தேவை. மண் சார்ந்த திரைப்படங்களை நாம் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆதரவு தேவை" என்றார்.

ஜிபி முத்து கூறியதாவது, “இதுதான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குநர்தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளனர். அது கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்குத் தேவை'' என்றார்.

நடிகர் சதீஷ் பேசியதாவது, “இந்த படத்தின் கதையை இயக்குநர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர். அவரை நெருங்கவே நாங்கள் தயங்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அவர் மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகை சன்னி லியோன் கூறியதாவது, ”தமிழகம் வந்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. OMG திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம். இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x