

நடிகர் விக்ரம் திரைத் துறையில் அடியெடுத்து வைத்து 32 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவுடன் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
1990-ம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரம். அதன் பிறகு அவர் பல படங்கள் நடித்தாலும், அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது 'சேது' படம்தான். அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து கமர்ஷியல், கன்டென்ட் என இரண்டு பாதைகளின் வழியே படங்களில் நடித்தவர், தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், 'பொன்னியின் செல்வன்' விக்ரமுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது.
சினிமாவில் நுழைந்து 32 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடங்களுக்கு நன்றி'' என கூறி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் 32 இயர்ஸ் ஆஃப் விக்ரம் (32YearsofChiyaanism) என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.