Published : 11 Oct 2022 03:07 PM
Last Updated : 11 Oct 2022 03:07 PM

‘விக்ரம்’ வசூல் சாதனையை நெருங்கும் ‘பொன்னியின் செல்வன்’

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியாகி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், தமிழத்தில் 'விக்ரம்' படத்தின் வசூல் சாதனையை நெருங்கிகொண்டிருக்கிறது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பான் இந்தியா முறையில் உருவான இப்படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடுவதும், குறைவதுமாக இருந்த நிலையில், படம் முதல் வாரம் மட்டும் ரூ.308.59 கோடியை வசூலித்தது. இரண்டாவது வாரத்தின் நான்கு நாட்களையும் சேர்த்து மொத்தம் உலகம் முழுக்க படம் ரூ.391.42 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கமலின் 'விக்ரம்' திரைப்படம் ரூ.410 கோடியை வசூலித்துள்ள நிலையில், 'பொன்னியின் செல்வன்' இன்னும் இரண்டு நாட்களில் அந்த வசூல் சாதனையை முறியடிக்கும் என திரைவர்த்தகர்களால் கணிக்கப்படுகிறது.

இதுவே, தமிழத்தைப் பொறுத்தவரை, படம் முதல் வாரம் மட்டும் ரூ.127.68 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் 4 நாட்களையும் சேர்த்து ரூ.171.94 கோடியை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 'விக்ரம்' திரைப்படம் ரூ.180 கோடியை தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையில் முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 'பொன்னியின் செல்வன்' விரைவில் முறியடிக்கும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x