'மைக்' மோகன் என அழைப்பதற்கு காரணம் உண்டு: நடிகர் மோகன் பகிர்வு

நடிகர் மோகன்
நடிகர் மோகன்
Updated on
1 min read

'மைக்' மோகன் என தன்னை அழைப்பதற்கான காரணத்தை நடிகர் மோகன் பகிர்ந்துள்ளார்.

80-களின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் மோகன். மோகன் நடித்த ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, ‘விதி’, ‘மௌனராகம்’, ‘மெல்லத் திறந்தது கதவு’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இதனாலேயே ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்டார். இறுதியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் நாயகனாக மோகன் நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்ததால் அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கிறார். ‘ஹரா’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மோகன், ''என்னுடைய முதல் படம் ‘கோகிலா’(கன்னடம்). பாலுமகேந்திரா பல்கலைகழகத்தின் மூத்த மாணவன் நான். அவர் மூலமாக நான் திரைத்துறையில் அறிமுகமானது எனது பாக்கியம். ‘கோகிலா’ படத்தை இன்று பார்த்தாலும் அது அப்டேட்டாக இருக்கும். கமலின் பிடித்தமான படங்களில் அந்தப் படம் இருக்கும். ஷோபா, ரோஜா ரமணி, மோகன் பிடித்தமான படங்களில் கோகிலாவுக்கு எப்போதும் நீக்கமற ஒரு இடம் இருக்கும் அதுதான் அந்தப் படத்தின் ஸ்பெஷல். பாலுமகேந்திராவின் சிறப்பு அது.

‘ஹரா’ படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. அப்பா - மகள் குறித்து பாசத்தை இப்படம் வெளிப்படுத்தும். என்னுடைய ரசிகர்கள் நான் படத்தில் நடிக்காதபோதும் கூட எனக்காக என்னுடைய பிறந்த நாளில் அன்னதானம் கொடுத்து கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி'' என்றார்.

மைக் மோகன் என கூறுவதற்கு என்ன காரணம் என கேட்டதற்கு, ''நான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், பாடகராக நடித்தது வெகு சில படங்கள் தான். அந்தப் படங்களில் இளையராஜாவின் இசையில், எஸ்பிபி குரலில் இடம்பெற்றிருந்த பாடல்கள் வெற்றியடைந்ததும் என்னை 'மைக்' மோகன் ஆக மாற்றிவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு முறை நான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார்கள். ஆக, நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in