Published : 07 Oct 2022 03:37 PM
Last Updated : 07 Oct 2022 03:37 PM

உலகம் முழுக்க ரூ.300 கோடியுடன் வசூலில் முன்னேறும் பொன்னியின் செல்வன் 

பொன்னியின் செல்வன் பட ஸ்டில்

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியாகி ஒருவாரம் கடந்துவிட்ட நிலையில், படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் உலகம் முழுக்க ரூ.78.29 கோடியையும், இரண்டாவது நாள் ரூ.60.16 கோடியையும், மூன்றாவது நாள் ரூ.64.42 கோடியையும் வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடுவதும், குறைவதுமாக இருந்த நிலையில், தற்போது படம் வெளியாகி 7 நாட்களில் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது 'பொன்னியின் செல்வன்'.

தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ.25.86 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாள் ரூ.21.34 கோடியையும், மூன்றாவது நாள் ரூ. 22.51 கோடி வசூலையும் ஈட்டியது. படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்தது. இதனையடுத்து தற்போது ஒருவாரம் கடந்துள்ள நிலையில் ரூ.130 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி வரை பெரிய படங்கள் இல்லாததால் ரூ.180 கோடியை எட்டி 'விக்ரம்' சாதனையை படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x