

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையே, நடிகர் கமல்ஹாசன் இன்று இந்தப் படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தி ஆகியோருடன் அமர்ந்து திரையரங்கில் ரசித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், "தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் பட சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது என்பது சந்தோசம் தான். அதைக் கொண்டாட தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆரோக்கியமான போட்டி இருப்பதில் தவறில்லை" என்று பேசினார்.
தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து மதம் இல்லை என்று கூறிய கருத்து குறித்து கேள்விகேட்கப்பட அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் கிடையாது. சைவம், வைணவம், சமணம் என்றே இருந்தது. அப்போது மதங்கள் வெவ்வேறு இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.