Published : 02 Oct 2022 02:28 PM
Last Updated : 02 Oct 2022 02:28 PM

பாக்யராஜை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது - நடிகர் உதயா

நடிகர் உதயா

இயக்குநர் பாக்யராஜை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது என நடிகர் உதயா நடிகர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து மூத்த நடிகர்-இயக்குநர் பாக்கியராஜ், நடிகர்கள் ஏ எல் உதயா மற்றும் பாபி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவது தொடர்பாக தன்னிலை விளக்க கடிதம் கிடைத்த போதே அதிர்ச்சியாக இருந்தது. தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்கியராஜ் போன்ற ஜாம்பவானுக்கு தன்னிலை விளக்க கடிதம் அனுப்பியதே வருத்தத்திற்குரிய விஷயம் எனும் போது நீக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னிலை விளக்க கடிதத்திற்கு பதில் விளக்க கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறேன் என்று கூறினேன். இருந்தபோதும் நான் இப்போது நீக்கப்பட்டுள்ளேன். என்னையும் சக நடிகரான பாபியையும் நீக்கியது கூட பெரிதில்லை. ஆனால் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பாக்கியராஜ் சார் அவர்களை நீக்கியது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் கடந்த தேர்தலின் போது தலைவராக போட்டியிட்டதற்காக அவரை நீக்கியது பெரும் குற்றம். இது ஒரு தவறான முன்னுதாரணம் மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

சங்கத்தில் இருந்து எங்களை நீக்கியிருப்பது தற்போது இருக்கும் நிர்வாகிகளின் பழிவாங்கும் எண்ணத்தையே காட்டுகிறது.
பழிவாங்கும் எண்ணம் இப்போது உள்ள நிர்வாகிகளிடம் ஆரம்பம் முதலே இருந்துள்ளது. கடந்த முறை பதவியில் இருந்த போது எதுவாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம் என்று கூறினோம். ஆனால் அதை கேட்காமல் நலிந்த நாடக கலைஞர்கள் உட்பட பலரை நீக்கி அவர்களது வருத்தத்தை சம்பாதித்தனர்.

கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் நீக்குகிறார்கள். அண்ணன் சரத்குமார் அணியை கேள்வி கேட்க உருவாக்கப்பட்டது தான் பாண்டவர் அணி. ஆனால் அவர்கள் (சரத்குமார் அணி) யாரையும் நீக்கவில்லை. சங்க கட்டிடட பணிகள் முழுமையாக நடைபெறவில்லை, உறுப்பினர்களின் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பழிவாங்குவது மட்டுமே இப்போது உள்ள நிர்வாகிகளின் குறிக்கோளாக உள்ளது. இப்போது உள்ள நிர்வாகிகளின் இந்த போக்கு பல உறுப்பினர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தால் தங்களையும் நீக்கி விடுவார்களோ என்ற பயம் பல உறுப்பினர்களிடம் உள்ளது.

சங்கத்திற்காக இப்போது உள்ள நிர்வாகிகளை விட நான் அதிகமாக உழைத்துள்ளேன். ஏ சி சண்முகம் (ஏ சி எஸ்) அவர்களிடம் இருந்து சங்க கட்டிடம் கட்டுவதற்காக வட்டியில்லா கடனாக பெரும் தொகை, சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகள் என்னால் நடந்துள்ளன. எனக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் நிலைமையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படி உறுப்பினர்களை நீக்குவது எதற்கும் தீர்வாகாது. எதுவாக இருந்தாலும் சுமுகமாகப் பேசி தீர்க்க வேண்டும்.

சங்க உறுப்பினர்கள் 64 பேர் இதுவரை இறந்துள்ளனர். அவர்களுக்கு இறுதி சடங்கிற்கான பணம் கூட வழங்கப்படவில்லை. சங்க கட்டிட பணிகளை முடிப்பது, மற்றும் சங்க உறுப்பினர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே தற்போதைய தேவை. ஒரு உறுப்பினராக சங்க விதிகள் அனைத்தையும் அறிந்தவன் என்ற முறையில் எனது தரப்பு விளக்கத்தை அளிப்பது என் கடமை என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x