Published : 09 Sep 2022 08:22 PM
Last Updated : 09 Sep 2022 08:22 PM

“அப்பா பணமில்லாமல் தவிப்பதாக வரும் செய்தி பொய்” - பாரதிராஜா மகன் மனோஜ் விளக்கம்

''அப்பா பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தயவு செய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்'' என பாரதிராஜாவின் மகன் மனோஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார். முன்னதாக அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மற்றும் அவரது மகன் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜாவின் மகன் மனோஜ், ''எனது தந்தை பாரதிராஜா நலமுடன் இருக்கிறார். ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளது.

இடையில் ஏதோ அவர் பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தயவுசெய்து அதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

பாரதிராஜா இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். எல்லாமே அவருக்கு சினிமா தான். சினிமாதான் அவருடைய மூச்சு சுவாசம் எல்லாம், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நான்கைந்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப் பிரபலங்கள் நிறைய பேர் நேரில் வந்து அவரைச் சந்தித்தனர். அவர் சிகிச்சையில் இருந்தபோதே அவர் நடித்த படங்கள் எல்லாம் போட்டுக் காட்டினார். மீண்டும் 'திருச்சிற்றம்பலம்' படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார். விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்க உள்ளார்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x