Published : 02 Sep 2022 09:12 AM
Last Updated : 02 Sep 2022 09:12 AM

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம்

பம்பா பாக்யா | கோப்புப் படம்

சென்னை: பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா உயிரிழந்தார். அவருக்கு வயது 49. அவருடைய மறைவுக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை இருப்பினும் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைதளத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் ஆல்பமாக வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது 'அடி எதுக்கு உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே..' என்ற பாடல். அந்தப் பாடலால் இளைஞர்களால் கொண்டாடப்பட்ட பாடகர் பம்பா பாக்யா திரையுலகில் பிரபலமான பாடகராக தடம் பதித்தார். ஏ.ஆர்ரஹ்மான், ஹிப் ஹாப் ஆதி என்ன பல முன்னணி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிவந்தார். இந்நிலையில் அவர் அகால மரணமடைந்தார்.

கவனம் ஈர்த்த ’சிம்டாங்காரன்’: ரஹ்மான் இசையில் வெளியான ராவணன் படத்திலேயே இவர் பாடியிருக்கிறார். இருப்பினும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தில் விவேகா வார்த்தைகளில், ரஹ்மான் இசையில் உருவான 'சிம்டாங்காரன்' என்ற பாடலைப் பாடியதன் மூலமே அவர் பட்டி தொட்டியெல்லாம் வரவேற்பைப் பெற்றார்.

இவர் குரலில் மக்களின் மனங்களை வென்ற பாடல்கள் வரிசையில், சங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2.0' படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் காலமே காலமே, 'சர்வம் தாளமயம்' படத்தில் 'டிங்கு டாங்கு', ஆகியன குறிப்பிடத்தக்கவை. அண்மையில் வெளியான பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்திலும் இவர் பாடியிருக்கிறார்.

அதேபோல், விரைவில் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'பொன்னி நதி காண்போமா' என்ற பாடலையும் பாடியுள்ளார். செப்.30ல் பொன்னியின் செல்வன் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் பொன்னி நதி பாடலைப் பாடிய பம்பா பாக்யா மறைந்தார். அவரது அகால மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x