Published : 26 Aug 2022 06:54 PM
Last Updated : 26 Aug 2022 06:54 PM

“அதிமுகவில் முறையாக இணைந்து கட்சிப் பணியாற்ற தயார்” - ஓபிஎஸ்ஸை சந்தித்த பாக்யராஜ்

''அதிமுகவில் முன்பே இருந்தவன்நான். தற்போது முறையாக கட்சியில் அதிமுகவில் இணைந்து தொண்டனாக இருந்து கட்சிப் பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன்'' என்று இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பிற்கு பிறகு இயக்குநர் பாக்யராஜ் கூறும்போது, ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்ட இரு பெரும் தலைவர்கள் கட்சியை வழிநடத்தினர். அவர்களைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வந்தார். பிறகு இறுதியாக எடப்பாடி பழனிசாமி என கட்சி நல்ல பெயருடன் மக்களிடம் சென்று சேர்ந்திருந்து.

இடையில் திருஷ்டியாக கட்சிக்கு ஒரு சோதனை வந்துள்ளது. மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க வேண்டும், அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். நானும் அதை நீண்ட நாட்களாக சொல்லி வருகிறேன். மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி அதே பலத்துடன், தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதற்கு என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட தயாராக இருக்கிறேன்.

அதிமுகவில் முன்பே இருந்தவன் நான். தற்போது முறையாக கட்சியில் அதிமுகவில் இணைந்து தொண்டனாக இருந்து கட்சி பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன் அனைவரும் ஒன்று சேர்வார்கள், கொஞ்சம் நேரம் எடுக்கும். கட்சி நன்றாக இருக்க வேண்டும், இதை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் முடிந்தால் நானும் நேரடியாக சென்று தெரிவிப்பேன். அனைவரும் இணைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x