8 வருடமாக உருவான பிரம்மாஸ்திரா - ராஜமவுலி தகவல்

8 வருடமாக உருவான பிரம்மாஸ்திரா - ராஜமவுலி தகவல்

Published on

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா நடித்துள்ள இந்தி படம், ’பிரம்மாஸ்திரா பாகம் 1’. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாகிறது. தென்னிந்திய மொழிகளில் இயக்குநர் ராஜமவுலி வெளியிடுகிறார்.

சென்னையில் நடந்த இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜமவுலி, ரன்பீர் கபூர், நாகார்ஜூனா கலந்து கொண்டனர். ராஜமவுலி கூறும்போது, ‘‘பிரம்மாஸ்திரம் இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியமான படமாக இருக்கும். நமது இதிகாசங்களிலும், புராணங்களிலும் இருந்து உருவாக்கப்பட்ட கற்பனை கலந்த கதை இது. இந்த திரைப்படம் 8 வருட கடின உழைப்பில் உருவாகி இருக்கிறது. அஸ்திரங்களை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் இந்தப் படம் கூறியுள்ளது. இதில் நானும் இணைந்தது மகிழ்ச்சி’’ என்றார்.

ரன்பீர் கபூர் கூறும்போது, ‘‘இதன் மூலக்கதையை இயக்குநர் 10 வருடத்திற்கு முன் கூறியபோது, அந்த ஐடியா பிரம்மிப்பாக இருந்தது. இந்தப்படத்தில் தான் ஆலியா பட்டுடன் பழக ஆரம்பித்தேன். இப்போது கல்யாணம் ஆகிவிட்டது. அனைவருக்கும் புதிய அனுபவத்தை இந்தப்படம் தரும்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in